நவீன தமிழிலக்கியத்தை உலக வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வாழும் தமிழ் இலக்கிய விழா’வின் முதல் விழா ஏப்ரல் 3, 4ஆம் தேதிகளில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் இந்த விழாவில் இந்தியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து முப்பது தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அமெரிக்காவின் 13 எழுத்தாளர்கள் விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்.
விழாவின் அனைத்து அமர்வுகளையும் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இளைய தலைமுறையினர் ஒருங்கிணைத்து வழிநடத்தவுள்ளனர்.
பிற மொழி வாசகர்களிடையே நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் தொடர்ச்சியான இலக்கிய விவாதங்களை முன்னெடுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இவ்விழா இடம்பெறுகிறது.
விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிறப்புத் தொகுப்புகளாக வெளியிடப்பட உள்ளன. இவ்விழாவில் சிங்கப்பூர் சார்பாக தேசியக் கலை மன்றத்தின் ஆதரவோடு எழுத்தாளர் அழகுநிலா கலந்துகொள்கிறார்.
விழா குறித்துக் கூடுதல் தகவல்களை www.livingtamillitfest.org/news எனும் இணையப்பக்கத்தில் காணலாம்.

