உள்ளூர் எழுத்தாளரும் ஓய்வுபெற்ற முதன்மையாசிரியருமான பொன் சுந்தரராசு எழுதிய ‘ஒளி’ எனும் நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது.
தேசிய நூலக கட்டடத்தின் 5வது மாடியில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் பிற்பகல் 3 முதல் 5 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜீவஜோதி அச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன் உரிமையாளர் ஜோதிநாதன் வரவேற்புரையாற்றினார்.
தமிழறிஞர் முனைவர் சுப திண்ணப்பன் தமது தலைமை உரையில் நூலின் தலைப்பு, சிறப்பு குறித்து விரிவான கருத்துகளை எடுத்துக்கூறினார்.
சிறப்பு விருந்தினரான வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, சிறப்புரை ஆற்றியபின் நூலை வெளியிட்டார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்நூல் உருவாவதற்குத் தக்க ஆலோசனையும் ஆதரவும் தந்தவர்களுக்கு மேடையில் நூல் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளி ஆசிரியர் அனுராதா வாசகர் உரை ஆற்றினார்.
பின்னர், கல்வியமைச்சின் தாய்மொழித் துறை உதவி இயக்குநரும் முதன்மை சிறப்பாய்வாளருமான முனைவர் த.வேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக, நூலாசிரியர் ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையாற்றினார்.
இந்த நூல் வடிவம்பெற கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும், லீ குவான் யூ இருமொழிப் பிரிவும் நிதியாதரவு தந்துள்ளன. நூலின் பிரதிகள் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.