தமிழ் இலக்கிய ஆர்வலச் சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வாக அமைந்தது உள்ளூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் வெளியீடு.
உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டனர்.
மொத்தம் 367 பக்கங்களைக் கொண்டுள்ள வரலாற்றுப் புதினமான ‘செம்பியன் திருமேனி’, 82 வயதான திரு அன்பழகன் எழுதியுள்ள 37வது நூல். இந்நூலில் வெண்ணாகரம் என்ற குறுநிலப் பகுதியினை ஆட்சி செய்த சோழன் செம்பியன் திருமேனி நாயகனாக சித்திரிக்கப்படுகிறார்.
திரு அன்பழகன் எழுதிய தாய்த்தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது.
நிகழ்ச்சி மேடையில் 90 வயதான தமிழறிஞர் சுப. திண்ணப்பன் தம்பதியரும், புராப்நெக்ஸ் சொத்து முகவர் நிறுவன உரிமையாளர் இஸ்மாயில் கபூரின் தந்தையான 100 வயது அப்துல் கபூர் தம்பதியரும் முறையே ‘தமிழுக்குச் சிறப்பு’, ‘உழைப்புக்குச் சிறப்பு’ எனச் சிறப்பிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் திண்ணப்பன், வரும் ஆண்டுகளில் அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவதாகக் கூறினார்.
திரு கபூர், தாம் அதிகம் படிக்காவிட்டாலும் உழைப்பு, நேர்மை, உண்மை ஆகியவையே தம் உயர்வுக்குக் காரணம் என்றார்.
தொடர்ந்து நூலின் கதை குறித்த அறிமுகக் காணொளி காண்பிக்கப்பட்டது. அடுத்து, நூல் குறித்த சிறப்புரைகள் இடம்பெற்றன. இலங்கை, இந்திய அனைத்துலக வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் சதிஷ்குமார் சிவலிங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், ‘மக்கள் மனம்’ இதழாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ உள்ளிட்டோரின் உரைகளும் இடம்பெற்றன.
பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா, நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் உள்ளிட்ட ஆளுமைகள் இந்நூலை கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்களுடன் ஒப்பிட்டதை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் குறிப்பிட்டார்.
சிறப்புரை ஆற்றிய மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வரலாற்று நூல் மீதான ஆர்வம் இளையர்களிடையே அதிகரித்துள்ள சூழலில் இந்நூல் வெளிவருவதைச் சுட்டினார். இந்த நூல், திரைப்படம், காணொளிப் படைப்பு, நாடகம் ஆகிய வடிவங்களில் தழுவப்பட்டால் மேலும் அதிக இளையர்கள் இதனைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக ‘செம்பியன் திருமேனி’ நூல், டிசம்பர் 3ஆம் தேதியன்று மாலை 5.30 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியீடு கண்டது.
இந்நூல் மலேசியாவிலும் இலங்கையிலும் வெளியீடு காணக்கூடும் என்று திரு அன்பழகன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.