உணவு,பானத்துறையில் பணியாற்றிய ஆதாம் (உண்மைப் பெயரன்று), மணவிலக்கு காலகட்டத்தில் அளவுகடந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போதைப்புழக்கத்திற்கு அடிமையானார்.
வேலை இழந்து, கடனும் அதிகரித்த நிலையில் போதைப் பொருளை உட்கொண்டதோடு, அதனை விற்கவும் தொடங்கினார் ஆதாம். 2014ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகக் கைதான அவருக்கு 21 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்தாலும் பின்தங்கிவிடக்கூடாது என்ற எண்ணம் எழுந்தபோது படிக்க ஆசைப்பட்டதாக அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“சிறுவனாக இருந்தபோதும் நாள் முழுவதும் எந்த வேலையிலும் நடவடிக்கையிலும் இல்லாமல் சோம்பலாகப் பொழுதைக் கழித்தேன். எனக்கு பிடித்த ஒன்றே ஒன்று மிதிவண்டி,” என்று அவர் கூறினார்.
நலம் விசாரிக்க ஆளின்றி, பிறரையும் அணுகாது தன்மீதான பரிவுணர்ச்சியை ஆதாம் தொடர்ந்து வளர்த்துக்கொண்டிருந்தார். சிறுவயதில் தொடங்கிய இந்தத் தாழ்வு மனப்பான்மை அகலவில்லை.
அப்படி இருந்தவர், இன்று தன் உழைப்பாலும் மனவுறுதியாலும் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.
“படிப்பதற்கு சிலர் புதுவிதமான உத்திகளைக் கையாள்வதாகக் கேள்விப்படுகிறேன். நான் கற்கும் முறையோ காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒன்று. படிப்பதை நன்று உள்வாங்கி, குறிப்புகளைத் தயாரித்து மனனம் செய்வேன்,” என்று அவர் கூறினார்.
பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை (‘ஓ’ நிலை), மேல்நிலை (‘ஏ’ நிலை) தேர்வுகளை ஆதாம் வெற்றிகரமாக முடித்தார். “ஏ நிலைத் தேர்வின் பொதுத்தாள் பாடத்திற்கு உலக நடப்பு பற்றிய அறிவு தேவைப்படுவதால் அது எனக்கு ஆகக் கடினமாக இருந்தது. வர்த்தக நிர்வாகம் என் பாடத்திற்கு ஆராய்ந்து மதிப்பிடும் திறன் தேவைப்பட்டபோதும் அது எனக்கு ஓரளவு எளிதாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
ஆதாமிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மேல்நிலைத் தேர்வுச் சான்றிதழை இவ்வாண்டு வெற்றிகரமாகப் பெற்றதால் தமக்கு நெருக்கமானோர் மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
கல்வித்தகுதியையும் சிந்திக்கும் ஆற்றலையும் தொடர்ந்து மேம்படுத்தவேண்டும் என்பது இவரது விருப்பம்.
வயதில் மூத்தவராக இருந்தால் மட்டும் வளர்ச்சியும் முதிர்ச்சியும் தானாக ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் தன்னைப் பற்றி அறிந்துகொண்டு, தன் குறைகளைக் களைய முற்படவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதாக ஆதாம் கூறினார்.