ஜுரோங் வட்டாரத்தில் உள்ள இரு பொது மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு மேலும் தனிப்பட்ட முறையில் சிகிச்சையளிக்க துல்லிய மருந்து வகைகளையும் செயற்கை நுண்ணறிவையும் உபயோகிக்கவுள்ளன.
ஜூரோங் மூப்படைதல் மீள்திறன் திட்டத்தின்கீழ் (Jurong Ageing Resilience Project) ஜூரோங்ஹெல்த் வளாகத்தில் உள்ள இங் டெங் ஃபோங், ஜூரோங் சமூக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஃபெனோடைப்பிங் முறை (phenotyping process) சிகிச்சை மேற்கொள்வர். ஜூரோங் மூப்படைதல் மீள்திறன் திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும்.
‘ஃபங்ஷனல் ஃபெனோடைப்பிங்’ முறை ஒருவகை துல்லிய மருந்து முறையாகும். அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஜூரோங்ஹெல்த் வளாக மருத்துவமனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நோயாளித் தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் நோயாளிகள் எதிர்நோக்கக்கூடிய சுகாதார அபாயங்கள் அல்லது நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகக்கூடிய சாத்தியம் ஆராயப்படும்.
அதன் பின்னர் இரு மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்குத் தனிப்பட்ட சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கலாம். இந்த வருமுன் காப்புப் பராமரிப்பு முறை, தற்போது நடப்பில் இருக்கும் பராமரிப்பு முறையிலிருந்து மாறுபட்டது.
எடுத்துக்காட்டாக, விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்படும் நோயாளி ஒருவருக்குத் தற்போது அந்த எலும்பு முறிவைச் சரிசெய்ய சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிய அணுகுமுறையின்கீழ் போதுமான உடல் சத்து இல்லாத ஒருவர் வருங்காலத்தில் அவ்வாறு விழுந்து பிரச்சினைக்கு ஆளாவதைத் தடுக்க இப்போது என்ன செய்யலாம் என்ற அறிவுரை வழங்கி பராமரிப்புச் சேவை வழங்கப்படும்.
இத்திட்டம் 2026ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 1,000 நோயாளிகள் பலனடைவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.