‘ஈடுபாடு’ என்ற கருப்பொருளை முன்னிறுத்தி 20வது தமிழ்மொழி விழா இனிதே தொடங்கியது.
மீடியாகார்ப் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை தமிழ்மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த ஒருமாத விழாவை அதிகாரத்துவமாகத் தொடங்கிவைத்தார்.
அவருடன், மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுத் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர், வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் இவ்விழாவில், மொத்தம் 44 பங்காளித்துவ அமைப்புகளின் ஆதரவில் 43 நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் அங்கம் வகிக்கின்றன.
“தமிழை வெறுமனே வாழ்த்துவதோடு நின்றுவிடாது அதைப் பழகி, பயன்படுத்தி, உயிரூட்டி வாழ்ந்தால் மட்டுமே தமிழ் உயர்ந்த நிலையில் ஒரு வாழும் மொழியாகப் பல்லாண்டுகாலம் நிலைத்திருக்கும்,” என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி வலியுறுத்தினார்.
மேலும், இளையர்களை அதிக அளவில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன், அவர்கள் பயன்படுத்தும் மின்னிலக்க, சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகத் தமிழைக் கொண்டுசேர்க்கும் புத்தாக்கச் சிந்தனைகள் தாங்கிய நிகழ்ச்சிகள் இவ்வாண்டு இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த 20 ஆண்டுகளில் நம்மோடு பயணம் செய்த மாணவர்கள் சிலர், இன்று பல்வேறு அமைப்புகளின் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்து, தமிழைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது,” என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
மக்களுக்கு ஒரு செய்தியைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்றும் அந்த வகையில் 20 ஆண்டுகளாக மீடியாகார்ப் வசந்தம் தமிழ்மொழி விழாவின் ஒரு பங்காளராக இருந்துவந்துள்ளது என்றும் மீடியாகார்ப் நிகழ்ச்சியாக்கப் பிரிவு, தகவல் கதம்பம், சிறப்பு நேரடி நிகழ்ச்சிகளுக்கான துணை அதிகாரி பிரியா சூரியமூர்த்தி கூறினார்.
“தொடக்கத்தில் நாம் தொலைக்காட்சி வாயிலாகத்தான் இந்தச் செய்தியைக் கொண்டுசேர்த்தோம். ஆனால் இன்று, சமூக ஊடகங்கள், மின்னிலக்கத் தளங்கள் வாயிலாகவும் நாங்கள் மக்களுடன் இணைகிறோம்,” என்றார் அவர்.
கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்மொழி விழா கண்டுள்ள பரிணாம வளர்ச்சியைச் சித்திரிக்கும் சிறப்புக் காணொளி ஒன்று நிகழ்ச்சியின்போது திரையிடப்பட்டது.
தமிழ்மொழி விழாவில் இடம்பெறவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு முன்னோட்டமாகச் சில விறுவிறுப்பான மேடைப் படைப்புகளும் தொடக்க விழாவில் அரங்கேறின.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவானது 'தமிழ் வளர்ச்சிக்குழு' எனப் பெயர் மாற்றம் கண்டு, புதிய சின்னத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
மற்றோர் அங்கத்தில், மாணவர்களுடனான சுவாரசியமான ‘சிறு கதைத் தொடர்’ (Story Relay) இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினரான அதிபர் தர்மன், “நான் பள்ளிக்குச் செல்லும்போது…” என்று ஒரு வரியைக் கூறி கதையைத் தொடங்கி வைக்க, அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் கற்பனைத் திறனால் அந்தக் கதையை முடித்தனர்.
ஆடல், பாடல், கதைசொல்லல் எனப் பல்வேறு அங்கங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. தமிழ்மொழி உயிரோட்டமானதாகவும், காலத்திற்கு ஏற்ற வகையிலும், உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மொழியாகவும் திகழ்வதை அப்படைப்புகள் பறைசாற்றின.

