$3பி. பண மோசடி வழக்கு: $1.85பி சொத்துகள் ஒப்படைப்பு

$3பி. பண மோசடி வழக்கு: $1.85பி சொத்துகள் ஒப்படைப்பு

2 mins read
d14675e4-eaaf-455d-ac7c-0f1880dea9a6
இந்த வழக்கில் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளின் மொத்தத் தொகை இதுவரை கிட்டத்தட்ட $2.8 பில்லியன் ஆகும். முன்னதாக $944 மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன. - படம்: சிங்கப்பூர் காவல் துறை
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ஆகப்பெரிய பண மோசடி வழக்கில் காவல்துறையிடமிருந்து தப்பி ஓடிய 15 வெளிநாட்டவர்களின் கிட்டத்தட்ட $1.85 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனுடன் சேர்த்து இதுவரை ஒப்படைக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $2.8 பில்லியனுக்கு வருகிறது. முன்னதாக, சிறையில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 10 பண மோசடிக்காரர்கள் $944 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை ஒப்படைத்தனர்.

17 சந்தேக நபர்களில் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் சொத்துகளை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் காவல்துறை திங்கட்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தது. அவர்கள் சிங்கப்பூர் திரும்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 15 பேர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி காவல்துறை விளக்கவில்லை.

எனினும், மற்ற இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏறக்குறைய $144.9 மில்லியன் மதிப்புள்ள அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படாமல் உள்ளன அல்லது கைப்பற்ற சொத்துகள் தொடர்பாக என்ன உத்தரவு பிறப்பிப்பது என்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

$3 பில்லியன் பண மோசடி வழக்கில் 10 வெளிநாட்டவர்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி பல சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்ட 10 பேரைத் தவிர மேலும் 17 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக 2024 ஜூன் மாதம் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய 17 பேரில் யாரும் விசாரணை தொடங்கியதிலிருந்து திரும்பவில்லை.

குறிப்புச் சொற்கள்