தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து திங்கட்கிழமை (டிசம்பர் 8) மதியம் நடந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இணையத்தில் பகிரப்பட்ட விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட காணொளியில் ஒரு வேன் வாகனம் பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பது தெரிகிறது. விபத்தினால் சாலையின் இரு தடங்கள் மூடப்பட்டன. மீதம் இருந்த ஒரே தடத்தில் வாகனங்கள் செல்ல நேர்ந்ததால், நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் விபத்து பற்றிய தகவல் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குக் கிடைத்ததாகக் கூட்டாகத் தெரிவித்தன.
துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் விட்லி ரோட்டுக்குச் செல்லும் பாதை அருகே நடந்த விபத்தில் ஒரு மோட்டார்சைக்கிள், மூன்று கார்கள், இரண்டு வேன்கள் ஆகியன சம்பந்தப்பட்டிருந்தன. ஒரு 49 வயது ஆடவர் மருத்துவமனைக்குச் சுயநினைவுடன் அழைத்துச் செல்லப்பட்டார். சிறு காயங்கள் ஏற்பட்ட மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

