பிள்ளை வளர்ப்புக்கு ஆதரவளிக்கும் குடும்பக் கட்டமைப்பு

பெரிய குடும்பக் கட்டமைப்பை ஊக்குவிக்கும் ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்றத்தின் தலைவர் கீத் மேக்னஸ்

பிள்ளை வளர்ப்புக்கு ஆதரவளிக்கும் குடும்பக் கட்டமைப்பு

2 mins read
c276d4f7-d362-4841-a429-7175c2171f7f
அனைத்துலக குடும்ப தினத்தை முன்னிட்டு, ‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்றத்தின் தலைவர் கீத் மேக்னஸ்  மே 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 2025ல் 0.87 என்ற ஆகக் குறைந்த அளவை எட்டியுள்ள நிலையில், குடும்பம் குறித்த பார்வையில் மாற்றம் தேவை என்று ‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்றத்தின் தலைவர் கீத் மேக்னஸ் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அமைப்பின் தலைவராக ஜனவரி மாதம் பொறுப்பேற்ற திரு மேக்னஸ், சுருங்கி வரும் குடும்ப அளவைக் கருத்தில்கொண்டு, தாத்தா-பாட்டி, அத்தை, மாமா என விரிவான உறவினர்களை உள்ளடக்கிய பெரிய குடும்பக் கட்டமைப்பை நோக்கி நாம் நகர வேண்டும் என்றார் அவர்.

“பிள்ளைகளை வளர்க்க வலுவான ஆதரவுக் கட்டமைப்புத் தேவை,” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் சட்டங்களின் மூலம் ஒருவரை நல்ல கணவராகவோ அல்லது தந்தையாகவோ மாற்ற முடியாது. பெற்றோராக இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை மக்கள் உணர வேண்டும் . “பிள்ளைகள் நமக்கு எல்லையற்ற அன்பை வழங்குகிறார்கள். அந்த மகிழ்ச்சியை நாம் மீட்டெடுத்தால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மே 30 முதல் ஜூன் 28 வரை நடைபெறவுள்ள தேசிய குடும்ப விழா, ‘குடும்பம் என்னிடமிருந்து தொடங்குகிறது’ (Family Begins with Me) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.

இதையொட்டி மே 30, 31 ஆகிய தேதிகளில் எக்ஸ்போ மையத்தில் மாபெரும் குடும்ப திருவிழா நடைபெறவுள்ளது.

வலுவான குடும்பங்களைக் கொண்டவர்கள், பின்தங்கிய நிலையில் உள்ள மற்ற குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும். அது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும்.

ஊழியர்கள் வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையைப் பேண, நிறுவனங்கள் குடும்பம் -நட்பு சூழலை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

2027ல் வெளியிடப்படவுள்ள திருமணம், பெற்றோர் நிலை குறித்த புதிய ஆய்வறிக்கை, சிங்கப்பூரின் எதிர்கால குடும்பக் கொள்கைகளுக்கு முக்கிய வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்