டான் டோக் செங் மருத்துவமனை இவ்வாண்டு இறுதிக்குள் அதன் 27 படுக்கைப் பிரிவுகளில் பணியாற்றும் 2,500 தாதியரின் வேலைநேரத்தில் நீக்குப்போக்கான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன்வழி சிங்கப்பூரில் நீக்குப்போக்கான வேலைநேர ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தும் முதல் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனையாகும்.
ஒரு படுக்கைப் பிரிவைச் சேர்ந்த 52 தாதியருக்கு இது முதன்முதலில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து நான்கு படுக்கைப் பிரிவுகளில் உள்ள 200 தாதியருக்குத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நீக்குப்போக்கான வேலைநேரத்தை, தாதியரில் சுமார் 90 விழுக்காட்டினர் தெரிவு செய்துள்ளனர்.
மேலும், தாதியரில் 30 முதல் 40 விழுக்காட்டினர் ஒரே நேரத்தில் இந்த நீக்குப்போக்கான வேலைநேரத்தில் பணியாற்றுவர்.
புதிய நடைமுறைவழி, வழக்கமான வேலைநேரத்துடன் நீக்குப்போக்கான வேலைநேரத்தையும் இணைத்து இரு வாரங்களுக்கு 80 மணிநேரம் என்ற நிபந்தனையைத் தாதியர் நிறைவேற்றினால் போதும் என்றும் கூறப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட ‘ஷிஃப்ட்’ தாதியர், அடுத்த ‘ஷஃப்ட்’ தாதியரிடம் குறிப்பிட்ட சில பணிகளை ஒப்படைக்கும்போது அதற்கு ஒரு மணிநேரமாகிவிடுகிறது என்று குறிப்பிட்ட டான் டோக் செங் மருத்துவமனையின் தலைமைத் தாதி ஹோய் ஷு யின், இப்போது தொழில்நுட்ப உதவியுடன் அச்செயல்முறை ஏறத்தாழ 15 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நீக்குப்போக்கான வேலைநேரத்தில் பணியாற்றும் தாதியருக்குக் குறிப்பிட்ட சில பணிகளும் வழக்கமான ‘ஷிஃப்ட்’ பணியில் உள்ளோருக்கு அனைத்துவித பணிகளும் தரப்படும். இவ்வாறு தாதிமைப் பணியை மருத்துவமனை மறுவடிவமைத்துள்ளது.
தாதியர் பணியின் ஈர்ப்புத்தன்மையை இந்தப் புதிய ஏற்பாடு வலுப்படுத்தும் என்று டாக்டர் ஹோய் கூறினார்.
இது தாதிமைத் துறைக்கே ஒரு திருப்புமுனை என்றும் அவர் குறிப்பிட்டார்.