புக்கிட் பாஞ்சாங்கில் ஜனவரி 14ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குப் பிறகு, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஜெலபாங் ரோடு, புளோக் 501இல் ஏற்பட்ட அந்த தீச்சம்பவம் குறித்து அதிகாலை 3.55 மணிவாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாம் மாடியில் இருந்த வீடு ஒன்றின் படுக்கை அறையில் தீ மூண்டது. தீயை அணைக்க, தனது அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழையவேண்டியிருந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவர்கள் பின்னர் நீரைப் பீய்ச்சி தீயை அணைத்தனர். குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 100 குடியிருப்பாளர்கள் சொந்தமாகவே புளோக்கில் இருந்து வெளியேறிவிட்டனர்.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் லேசான காயங்களுக்கு மேலும் நால்வரைச் சோதித்தனர். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர்.
தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.