அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை நேரத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதியதில் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்குள் சிக்கிக்கொண்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி 74 வயது ஓட்டுநரை மீட்டது.
அவரும், விபத்தில் பாதிக்கப்பட்ட 81 வயது பெண் பயணியும் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு பகுதியில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விசாரணையில் பேருந்து ஓட்டுநர் உதவி வருகிறார்.
சிங்கப்பூரில் சாலைப் போக்குவரத்து உயிரிழப்புகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2025ஆம் ஆண்டு 149 என்ற உச்சத்தைத் தொட்டது. இந்த எண்ணிக்கை 2024ல் 142 ஆக இருந்தது.
காயங்களை விளைவிக்கக்கூடிய போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 7,053 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 7,560 ஆக உயர்ந்தது.
இப்பிரச்சினையைக் கையாள, அதிகாரிகள் சட்டங்களைக் கடுமையாக்கவும், வாகனம் ஓட்டுவதற்கான தடைக்காலத்தை அதிகரிக்கவும் திட்டமிடுகின்றனர்.

