காருக்குள் நினைவிழந்த நிலையில் காணப்பட்ட 58 வயது ஆடவர் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் பிப்ரவரி 16ஆம் தேதி அதிகாலை நேர்ந்தது.
அன்று அதிகாலை 5.50 மணியளவில் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31, புளோக் 375ல் கார் ஒன்று வழுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
அங்கிருந்து ஒருவரை இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த காரின் ஆண் ஓட்டுநர் நினைவை இழந்த நிலையில் காணப்பட்டார் என்றும் பின்னர் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என்றும் காவல்துறை தெரிவித்தது.
இதன் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் குறித்த படங்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன. சாம்பல் நிற கார் ஒன்று தடுப்பில் ஏறி நிற்பதையும் அதனைச் சுற்றி காவல்துறை அதிகாரிகள் பலர் இருப்பதையும் அப்படங்கள் காட்டுகின்றன.

