விரைவுச்சாலைகளில், குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில், அவசரகால வாகனங்களைப் பின்தொடர்வதற்காக வாகனங்கள் தடங்களை மாற்றுவதைப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை, ஐந்து வாகன ஓட்டிகளுக்கு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 17) இரவு மணி சுமார் 7.10க்கு, புக்கிட் திமா வெளிவழிக்கு முன்பு, ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் ஐந்து கார்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்து நிகழ்ந்தது.
சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட காணொளிகளில், நான்கு வழித்தடங்களில் வலப்புறம் உள்ள விரைவுச்சாலையில் போக்குவரத்துக் காவல்துறையின் சுற்றுக்காவல் வாகனம் ஒன்று அதன் அவசரகால ஒளிரும் விளக்குகளுடன் நிற்பது தெரிகிறது.
சுற்றுக்காவல் வாகனம் முன்னேறிச் செல்லும்போது, இரண்டாம் தடத்தில் இருந்த பல கார்கள் முதல் தடத்துக்கு மாறுவது தெரிகிறது. காணொளியின் அடிப்படையில், மற்றத் தடங்களில் போக்குவரத்து சற்று நெரிசலாக இருந்தாலும், வாகனங்கள் சீராகச் செல்வது தெரிகிறது.
சுற்றுக்காவல் வாகனத்திற்குப் பின்னால் செல்வதற்காகப் பின்தொடர்ந்துசென்ற வாகனங்களுக்கு முன்னால் குறுக்கிட முயன்ற ஒரு காரின் ஓட்டுநர், திடீரென வேகக் கட்டுப்பாட்டு விசையை இயக்கியதால் தொடர் விபத்து ஏற்பட்டது.
ஏஷியாஒன் செய்தித்தளம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, 32 வயதுப் பெண் பயணி சுயநினைவுடன் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

