பாலர் பள்ளி ஒன்றில் இரு சிறுவர்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 58 வயது மாது மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 13) நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இரு வேறு நாள்களில் அந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிறுவர்கள் மாதின் பராமரிப்பில் இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. எனினும், மாது பற்றிய மேல்விவரங்களைக் குறிப்பிடவில்லை.
கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் தேதி ஐந்து வயது சிறுமியின் தலையில் இருமுறை அடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்குப் பின்னர், ஏப்ரல் 11ஆம் தேதி, நான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கைகளைப் பிடித்து இழுத்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டால் சிறுவர்களின் அடையாளம் தெரியவரும் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
வழக்கு ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

