சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்தின் முத்திரையை ஒப்புதல் இன்றி பயன்படுத்தியதை உள்ளூர் நீர் வடிகட்டி நிறுவனமான ‘ஏஓஎக்ஸ்’ (AOX) ஒப்புக்கொண்டுள்ளது.
ஆணையம் தனது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிறுவனம் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
“நிறுவனத்தின் அந்த அறிக்கைத் தவறானது. ஏஒஎக்ஸ் நிறுவனத்தின் எந்தக் கண்டுபிடிப்புகளையும் ஆணையம் சரிபார்க்கவில்லை,” என்று சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அறிக்கை வெளியிட்டது.
தனது முத்திரையை ஒப்புதல் இன்றி பயன்படுத்தியது நியாயமற்ற வர்த்தகப் பழக்கம் என்றும் குற்றம் என்றும் ஆணையம் சுட்டியது.
தவற்றை ஒப்புக்கொண்ட நீர் வடிகட்டி நிறுவனம் ஆணையத்தின் முத்திரை பயன்பாட்டை நிறுத்திக்கொள்ளும் என்றும் நியாயமற்ற வர்த்தகப் பழக்கங்களில் இனி ஈடுபடப்போவது இல்லை என்றும் தெரிவித்தது.
தனது இணையப்பக்கத்திலும் கடைகள் அனைத்திலும் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.
“தவறான விளம்பரப் பழக்கங்களைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஆணையம் எந்த வர்த்தகத்துக்கும் தரசான்றிதழ் அளிக்காது. ஏஒஎக்ஸ் நிறுவனம் கூறுவதுபோல அதன் கண்டுபிடிப்புகளை ஆணையம் மறுஆய்வு செய்யவில்லை,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி அல்வின் கோ சொன்னார்.
எந்த வர்த்தகமும் அதன் விளம்பரத்திலோ பொருள்களிலோ சேவைகளிலோ ஆணையத்தின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று திரு கோ வலியுறுத்தினார்.

