சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், ஆசிய உருமாற்றத்துக்கான சிங்கப்பூர் நிதி நிறுவனத்தின்கீழ் செயல்படும் ஒரு முதலீடு அமைப்புக்கு கடனுதவி வழங்கவுள்ளது.
ஃபாஸ்ட்-பி (Fast-P) எனப்படும் தலைமை நிறுவனத்தின் அங்கமான இடிஎஃப்கோ (ETAFCo) எனும் அந்த அமைப்புக்கு டிபிஎஸ் S$272.3 மில்லியன் கொடுத்து உதவ முன்வந்துள்ளது. அத்தலைமை நிறுவனத்துக்கு டிபிஎஸ் முதன்முறையாக வழங்கும் கடன் இதுவாகும்.
இடிஎஃப்கோ அமைப்பை கிளிஃபர்ட் கேப்பிடல் நிர்வகிக்கிறது.
இயற்கை நிலக்கரியைத் தவிர்த்தல்
ஆசிய வட்டாரத்தில் இயற்கை நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து, தூய்மையான எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அந்த நிதி உதவும்.
மறுசுழற்சி எரிசக்தி, மின்கட்டமைப்பு மேம்பாடு, எரிபொருள் சேமிப்பு, பசுமை ஆற்றல் வளங்களை அதிகரித்தல் ஆகியவை திட்டங்களில் அடங்கும்.
ஃபாஸ்ட்-பி நிறுவனத்தின்கிழ் செயல்படும் இரு பங்காளித் திட்டங்களில் இணைந்துள்ள ஒரே வர்த்தக வங்கி டிபிஎஸ் ஆகும்.
ஏற்கெனவே அவ்வங்கி கிரீன் இன்வெஸ்ட்மன்ட் பார்ட்னர்ஷிப் என்ற திட்டத்திற்கு S$97.28 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. அந்தத் திட்டத்தை பென்டகிரீன் கேப்பிடல் அமைப்பு நிர்வகிக்கிறது.

