உண்மையான தங்கம் போலவே தென்படும் போலித் தங்கப் பொருள்களின் புழக்கம் சந்தையில் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூரின் சில தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்க விலை அதிகரித்த நிலையில் இந்தச் சூழல் நிலவுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் போலித் தங்கம் தொடர்பில் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதைக் காட்டிலும் இம்முறை 50 விழுக்காடு கூடுதலான புகார்களைக் காவல்துறையிடம் அளித்திருப்பதாக விற்பனையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வாரத்துக்கு ஐந்து போலித் தங்கப் பொருள்கள் வரை விற்கப்படுவதைத் தான் கண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனவரியில் தங்க விலை முதன்முறையாக 5,100 அமெரிக்க டாலரைத் (6,523 வெள்ளி) தொட்டது. அதன் பிறகு விலை சற்றே குறைந்திருந்தாலும், இன்னமும் 4,000 டாலருக்கு அதிகமாக இருக்கிறது.
அதனால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக இணைய விற்பனைத் தளங்கள், சமூக ஊடக மறுவிற்பனைத் தளங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும்.
கடந்த பிப்ரவரியில் தங்கள் தளத்தில் தங்கப் பொருள்களுக்கான தேடல், ஆண்டு அடிப்படையில் 17 விழுக்காடு அதிகரித்ததாக கரோசல் மின்வர்த்தகத் தளம் தெரிவித்தது.
நேரடியாகச் சென்று வாங்கும் கடைகளில் போதுமான தங்கம் விற்கப்படாததால் சமூக ஊடகத் தளங்கள்வழி விற்பனை இடம்பெறுவது பிரபலமாகி வருவதாக சிங்கப்பூரில் இயங்கும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள, மதிப்புமிக்க உலோகப் பொருள் நிறுவனமான மெட்டல் & பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குவெக் சியாவ் பின் கூறினார். தனியார் சந்தையில் தங்கம் வாங்குவோருக்காக அவர் டெலிகிராம் குழு ஒன்றை நடத்துகிறார்.
உண்மையான தங்கத்தை வாங்குபவர்கள் அதை உடனடியாகப் பெற விரும்புவர்; அதனால் மதிப்புமிக்க உலோகக் கடைகளிலிருந்து பெற முடியாதவர்கள் இரண்டாம்நிலைச் சந்தைகளில் வாங்க முயற்சி செய்வதாக அவர் சிஎன்ஏயிடம் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய இரண்டாம்நிலைச் சந்தைகள் மூலம் போலி தங்கப் பொருள்கள் நுழைவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வேளைகளில் அவை வெளிநாடுகளிலிருந்து வருகின்றன.
தாங்கள் விற்கும் பொருள்களின் நம்பகத்தன்மை குறித்து எல்லா இணைய வர்த்தகர்களும் உண்மையாக இருப்பதில்லை என்று கோல்ட்சில்வர் சென்ட்ரல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரையன் லான் சோங்பிங் கூறினார்.
தனியார் சந்தையில் தங்கம் வாங்குவோர்தான் ஆக அதிக பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளவர்கள் என்று விற்பனையாளர்கள் எச்சரிக்கின்றனர். விலை நம்ப முடியாத அளவுக்குக் குறைவாக இருந்தால் அதுவே ஏமாற்றுச் செயல் நடப்பதற்கான மிகப்பெரிய அறிகுறி என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

