விரைவுச்சாலை விபத்தில் லாரியில் சிக்கிய ஓட்டுநர்: நால்வர் காயம்

விரைவுச்சாலை விபத்தில் லாரியில் சிக்கிய ஓட்டுநர்: நால்வர் காயம்

1 mins read
12288e2b-f5e7-4b43-ae88-a19e4b6c309b
ஆயர்ராஜா விரைவுச் சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் (ஜூலை 3) நிகழ்ந்தது.   - படம்: ஷின்மின் சீன நாளிதழ்
multi-img1 of 2

ஆயர்ராஜா விரைவுச் சாலையில் துவாஸ் நோக்கிச் செல்லும் பாதையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை 11.15 மணியளவில் நடந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்டன.

அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஒன்றின் ஓட்டுநர் அந்த வாகனத்தில் சிக்கிக்கொண்டதால், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (எஸ்சிடிஎஃப் ) அவரை மீட்பு சாதனங்ளைக் கொண்டு வெளியேற்ற நேரிட்டது.

அவர் உட்பட நால்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்தில் மேலும் இரு லாரி ஓட்டுநர்களும் டிரெய்லர் எனப்படும் கொள்கலன் இழுவை வாகன ஓட்டுநர் ஒருவரும் காயமுற்றனர்.

மொத்தம் நான்கு லாரிகளும் ஒரு டிரெய்லர் வாகனமும் விபத்துக்குள்ளாகின.

துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர்ராஜா விரைவுச் சாலையில் பெனோய் சாலைக்கு செல்லும் பாதைக்கு முன்னதாக விபத்து நடந்தது குறித்த தகவல் கிடைத்ததாகக் காவல் துறையும் எஸ்சிடிஎஃப் படையும் சனிக்கிழமை கூட்டாகத் தெரிவித்தன.

28க்கும் 55க்கும் இடைப்பட்ட வயதுள்ள நான்கு ஓட்டுநர்கள் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையும் அவை உறுதி செய்தன.

மற்றொருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

விபத்துக்குப் பிறகு, ஜூரோங் பியர் சாலை தொடங்கி, நீண்டநேரம் விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் மதியம் வரை தொடர்ந்ததாக சீன ஊடகங்களுக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்