சாய் சீ வட்டாரத்தில் உள்ள தரவு நிலையம் ஒன்றில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) காலை தீ மூண்டது, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
750C சாய் ரோட்டில் தீ மூண்டதாக வெள்ளிக்கிழமை அதிகாலை ஆறு மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 1-நெட் எனும் நிறுவனம் நிர்வகிக்கும் தரவு நிலையம் ஒன்றில் தீ மூண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
1-நெட், நிறுவனங்களுக்குத் தரவு நிலையச் சேவை வழங்கி வருகிறது.
வெடிப்பு ஏற்பட்டதால் தீ மூண்டதென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டது. அந்த மின்னஞ்சலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்திருக்கிறது.
1-நெட்டின் ‘சர்வர்’ இயந்திரங்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது முதற்கட்டச் சோதனைகளில் தெரிந்தது. எனினும், அந்நிறுவனம் இயல்புநிலைக்குத் திரும்ப நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புக் கருவியால் (fire extingusher) தீ அணைக்கப்பட்டது. தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் தானியக்க முறையும் (water sprinkler system) இயக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. புகையை சுவாசித்த காரணத்தினால் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது.
1-நெட், மீடியகார்ப் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று அதன் இணையத்தளத்தில் தெரிவிப்பட்டுள்ளது.

