ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (மே 19) தீவிபத்து ஏற்பட்டது.
அதனையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஹவ்காங் அவென்யூ 1ல் இருக்கும் புளோக் எண் 238ல் நடந்த தீச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் 12வது தளத்தில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் தீ மூண்டதாக அது கூறியது.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, பாதிக்கப்பட்ட இடத்திலிருந்த நால்வர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட வீடு குறித்த படங்கள் ‘ஷின் மின்’ நாளிதழிடம் பகிரப்பட்டன. அதில், கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பாதிக்கப்பட்ட வீட்டின் சன்னல் வழியே அடர்ந்த புகை வெளியேறுவதை அந்தப் படங்களில் காணமுடிந்தது. சன்னலுக்கு அருகே உள்ள சுவர்களும் தீயினால் கருகி இருப்பதையும் அதில் பார்க்கலாம்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

