ஈசூன் வட்டாரத்தில் இரு வெவ்வேறு இடங்களில் தீ மூண்டதை அடுத்து, 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவங்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிகழ்ந்தன.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் மின்கலன்கள் தீப்பிடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தீச்சம்பங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
புளோக் 392 ஈசூன் அவென்யூ 6ல் மூண்ட தீ குறித்து பிற்பகல் 1.25 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கட்டடத்தின் ஆறாவது மாடியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் கதவை உடைத்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டடத்திலிருந்து 16 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 345 ஈசூன் அவென்யூ 11ல் மூண்ட தீ குறித்து இரவு 11.40 மணி அளவில் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கட்டடத்தின் எட்டாவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் தீ மூண்டதாகவும் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தைத் தீயணைப்பாளர்கள் அடைவதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் வீட்டிலிருந்து வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக அறியப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

