பொங்கோல், சுமாங் லேனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 223ஏ-ல் வெள்ளிக்கிழமை (மே 1) ஒரு மணி நேரத்திற்குள் இரு வீடுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டன.
மாலை 6:50 மணியளவில் 9வது மாடியில் உள்ள நடைபாதையில் வீசப்பட்ட பொருள்களில் முதல் தீ விபத்து ஏற்பட்டது.
இரண்டாவது தீ விபத்து இரவு 7:40 மணியளவில் அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்டது.
தமது 6 வயது மகன் தீ மூட்டியுடன் (லைட்டர்) விளையாடியபோது தவறுதலாகத் தீ பற்றியிருக்கலாம் என்று அந்த 4வது மாடி வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இரு இடங்களிலும் ஏற்பட்ட தீயை அணைத்தது.
4வது மாடியில் ஏற்பட்ட தீயால் வீடு முழுவதும் கருகிப் போனது என்று சாவ் பாவ் சீன நாளிதழ் செய்தி தெரிவித்தது. மெத்தை, உடைகள், தளவாடங்கள் எல்லாம் தீயில் எரிந்து போயின.
புகையைச் சுவாசித்த நால்வரும், பணியின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட இரு தீயணைப்பு வீரர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அக்கட்டடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தற்காலிகத் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

