சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) பிற்பகல் பெய்த கனமழை காரணமாக புக்கிட் தீமா வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கிங் ஆல்பர்ட் பார்க்கிற்கு (King Albert Park) அருகே உள்ள டன்யர்ன் சாலை, புக்கிட் தீமா சாலைக்கு அருகே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. மாலை 5.22 மணிக்குள் அப்பகுதிகளில் வெள்ளம் வடிந்ததாகக் கழகம் இன்னொரு பதிவில் தெரிவித்தது.
முன்னதாக, மேலும் ஒரு மணிநேரத்திற்குக் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாலை 4.51 மணிக்குக் கழகம் தெரிவித்திருந்தது. கனமழை காரணமாக சுவா சூ காங், தோ பாயோ, புக்கிட் தீமா, நகர்ப்பகுதி ஆகிய இடங்களுக்குக் கழகம் முன்னதாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஒரு மணி நேரத்திற்கு சுவா சூ காங் அவென்யூ 1 வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு கழகம் மாலை 4.39 மணிக்கு எக்ஸ் தளம் வழியாக அறிவுறுத்தியிருந்தது. அதன்பின் ஐந்து நிமிடங்களுக்குள், தோ பாயோ லோரோங் 1, 2, எங் கோங் பிளேஸ் (Eng Kong Place) போன்ற இடங்களைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.