சிங்கப்பூரிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வறண்ட, வெப்பமான வானிலை காரணமாக வரும் வாரம் காட்டுத்தீச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதனால் புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியிலிருந்து அடுத்த வார இறுதி வரை வறண்ட, வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. இந்தோனீசியாவின் மத்திய சுமத்திரா, மலேசியாவின் ஜோகூர் ஆகிய பகுதிகளின் மேல் புகை எழுவது காணப்பட்டதாக வாரியம் குறிப்பிட்டது.
வறண்ட வானிலையோடு வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காற்று தொடர்ந்து வீசுவதாலும் காட்டுத்தீச் சம்பவங்களும் புகைமூட்டம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என்று வாரியம் சொன்னது.
வரும் வாரம் சிங்கப்பூரின் வானிலை மேலும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 35லிருந்து 36 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும் என்று வாரியம் கூறியது.

