சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை வெளிநாட்டு ஊழியர்கள் தெரியப்படுத்துவதற்கு உதவ மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
ஒரு செயலியின் மூலமாகவும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தொண்டூழியர் திட்டத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ (ஃபேஸ்) எனப்படும் தொண்டூழியர் திட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினைகள் போன்றவற்றை அந்தத் தொண்டூழியர்கள் மூலம் அவர்களின் சக ஊழியர்கள் மேலும் எளிதில் தெரியப்படுத்த வகைசெய்வது நோக்கமாகும்.
ஏஸ், மனிதவள அமைச்சின்கீழ் இயங்கும் குழுவாகும். அது, வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்கு ஆதரவளிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள், அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் ஆகிய தரப்புகளுடன் இணைந்து பணியாற்றிவருகிறது.
மனிதவள அமைச்சின் எஃப்டபிள்யுஎம்ஓஎம்கேர் (FWMOMCare) செயலி போன்றவற்றின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கைகொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு தினேஷ் தெரிவித்தார்.
நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் கவலைகளைத் தெரியப்படுத்தத் தயங்கக்கூடும் என்று அவர் சுட்டினார்.
“இதற்கான தெரிவுகள் இருப்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இருப்பினும் அதிகாரபூர்வத் தளங்கள் அல்லது அதிகாரபூர்வமற்ற முறைகளின்வழி தெரியப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.
“குறிப்பாக, அவர்களின் கருத்துகள் செவிமடுக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்,” என்றார் அவர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்தும் வலையொளித் தொடரின் ஓர் அங்கத்தில் திரு தினேஷ் பேசினார்.
பெரிய, நடுத்தரப் பரப்பளவைக் கொண்ட தங்குவிடுதிகள், தனியார் மற்றும் அரசாங்க வீடுகள் ஆகியவற்றில் வசிக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள் கிட்டத்தட்ட 1,000 பேரை மனிதவள அமைச்சு நிர்வகித்துவருகிறது.
அந்தத் தொண்டூழியர்க் குழுவால் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நால்வரில் மூவரைச் சென்றடைய முடியும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.


