இணையம்வழி பொருள்களை விற்பனை செய்யும் 732 பேருக்கு சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவப் பொருள்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களைக் களைய அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக ஆணையம் அந்த எச்சரிக்கையை விடுத்தது.
விழி வில்லைகளை டெலிகிராம் வழி விளம்பரப்படுத்திய 18 வயது சிங்கப்பூர்ப் பெண் எச்சரிக்கை பெற்றவர்களில் ஒருவர்.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை ஆப்பரேஷன் பெங்கியா என்ற நடவடிக்கையின் ஓர் அம்சம். அது, இன்டர்போல் எனும் அனைத்துலக காவல்துறை அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை.
கடந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் கடந்த மாதம் 16ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 90 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கெடுத்தனர்.
அதன்வழி அவர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 50.4 மில்லியன் மாத்திரைகளைக் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $83.2 மில்லியன்.
அதையடுத்து 769 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அனைத்துலக அளவில் 123 குற்றவியல் குழுக்களும் கலைக்கப்பட்டன.
கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இத்தகைய சோதனை நடவடிக்கைகளில் ஆக அதிகமானோர் இந்த முறைதான் கைதுசெய்யப்பட்டதாக இன்டர்போல் சொன்னது.
அனுமதிக்கப்படாத, போலியான மருந்துகளின் அனைத்துலக வர்த்தகம் எந்தளவுக்கு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது என்பதை அது காட்டுவதாக அனைத்துலக காவல்துறை அமைப்பு குறிப்பிட்டது.
ஒட்டுமொத்தமாக, அனைத்துலக சோதனைகள் மூலம் குற்றங்களுடன் தொடர்புடைய இணையத்தளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், போலியான, சட்டவிரோத சந்தைகள் எனக் கிட்டத்தட்ட 13,000 தளங்கள் மூடப்பட்டன.
“மலேசியா ஆக அதிகமான எண்ணிக்கையில் கள்ளத்தனமான இணைய வர்த்தகத்தை நீக்கியது. அது ஏறக்குறைய 7,000 தளங்களை முடக்கியது. அதையடுத்து ரஷ்யா, அயர்லாந்து, சிங்கப்பூர், ஈரான் ஆகியவற்றிலும் தளங்கள் மூடப்பட்டன,” என்று அனைத்துலக காவல்துறை அமைப்பு சொன்னது.