சிங்கப்பூர் எனும் சின்ன தீவு 60 ஆண்டுகளில் கண்ட பேரளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் தொடங்கிவிட்டது எஸ்ஜி60 தேசிய தின அணிவகுப்பு.
அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம், அவர்களை வரவேற்க நீண்ட நெடு நேரமாகப் புன்னகை மாறாமல் நின்றுகொண்டிருக்கும் தொண்டூழியர்கள், அணிவகுப்பை அலங்கரிக்கவுள்ள நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் என விழாக்கோலம் பூண்டிருந்தது பாடாங் திடல்.
தேசத்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல, குடும்பங்கள், இளையர்கள், நாட்டின் உருவாக்கத்தில் இதயத்துடிப்பாகத் திகழ்ந்த மூத்தோர், வெளிநாட்டு விருந்தினர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒரே மக்களாக ஒன்றுகூடியுள்ளனர்.
‘முன்னேறட்டும் சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் களைகட்டியுள்ள இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் பாடாங் திடலுக்கு அப்பால் மரினா பே வட்டாரத்திலும் விமரிசையாக அரங்கேறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழா அரங்கைச் சுற்றி கார்மேகங்கள் சூழத் தொடங்க, மழை கொட்டித் தீர்க்கும் எனக் குடைகளை மக்கள் கையிலெடுக்க, திரண்ட மேகங்களும் வாழ்த்துச் சொல்ல வந்ததுபோல சிறிது நேரத்தில் கலைந்துவிட்டது. சிவப்பு, வெள்ளை உடை அணிந்து, சிங்கப்பூரர் எனும் ஒற்றுமையுணர்வை மனத்தில் பதிந்து உற்சாகம் குறையாமல் தேசிய தின அணிவகுப்பு நடக்கும் அரங்கிற்குள் குவிந்த வண்ணம் உள்ளனர் பார்வையாளர்கள்.
விழா நடக்கும் மரினா பே வட்டாரத்தில் சுமார் 20,000 பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பிரதான நிகழ்ச்சி அரங்கேறவுள்ள பாடாங்கில் 27,000 பார்வையாளர்கள் திரளுவர் என்றும் அறியப்படுகிறது.