கைக்குழந்தையாக இருந்தபோதே தந்தையின் தோளில் சாய்ந்து தைப்பூச இன்பத்தில் திளைத்து வந்தார் தினேஷ் ஆதிரன்.
இப்போது மூன்று வயதாகும் தினேஷ், குட்டிக் காவடி ஒன்றைச் சுமந்து சென்றார்.
ஐந்து வயது அண்ணன் கேஷவ் விஷ்வாவுடனும் தந்தையுடனும் நடந்து சென்றதை பிற்பகல் 2.30 மணியளவில் எமது புகைப்படச் செய்தியாளர் கண்டார்.
ஊர்வல நடையில் காவடி தூக்கியபடி தினேஷின் பிஞ்சுப் பாதங்கள் அடியெடுத்துச் சென்ற காட்சி, பார்ப்போரை நெகிழ வைக்கும்படியாக இருந்தது.
இந்தச் சுட்டிகள் உள்பட இவ்வாண்டு 19,000க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், 349 பக்தர்கள் காவடி சுமந்தும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
உண்மையான பக்தி, ஒழுக்கத்துடனும் புலனடக்கத்துடனும் பின்னிப் பிணைந்ததாகக் கருதும் இந்தச் சிறுவர்களின் தந்தை, தங்கள் குடும்ப வாழ்க்கையில் தைப்பூசத்திற்கும் பக்திக்கும் முக்கிய இடத்தைத் தருவதாகக் கூறுகிறார்.

