ஹவ்காங்கில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) லாரி ஒன்று மரத்தின் மீது மோதியதைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் குப்பை லாரி ஓட்டுநரும் அடங்குவார். லாரி சறுக்கி மரத்தின் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட லாரி, கோரா என்வைரன்மென்ட் குப்பை நிர்வாக நிறுவனத்துக்குச் சொந்தமானது. விபத்து, ஹவ்காங் அவென்யூ 3 - ஹவ்காங் ஸ்திரீட் 12 சந்திப்புக்கு அருகே நிகழ்ந்தது.
சாலை மூடல் காரணமாக ஹவ்காங் அவென்யூ 3ல் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை காலை 5.50 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது.
33 வயது லாரி ஓட்டுநர் தமது இருக்கையில் சிக்கிக்கொண்டிருந்தார்.
பாயா லேபார் தீயணைப்பு நிலையம், சாங்கி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள், பேரிடர் உதவி, மீட்புக்குழுவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் ஓட்டுநரை மீட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த ஓட்டுநர், சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவு இல்லை.
லேசான காயங்களுக்கு ஆளான இரு பயணிகளும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயது 33, மற்றொருவரின் வயது 37.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

