சாலையைக் கடந்தபோது லாரி மோதி 26 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் அங் மோ கியோவில் நிகழ்ந்தது.
அங் மோ கியோ தொழிற்பூங்கா 2 - அங் மோ கியோ அவென்யூ 2 சந்திப்பில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இது தொடர்பான காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தலைக்கவசமும் பாதுகாப்பு அங்கியும் அணிந்திருந்த ஒருவர், நடையர்கள் சாலையைக் கடக்கும் பகுதியில் நடந்து சென்றதையும் அப்போது வலப்புறமாகத் திரும்பிய லாரி அவர்மீது மோதியதையும் அக்காணொளி காட்டியது. பச்சை விளக்கு ஒளிர்ந்தபோதே அவர் நடந்துசென்றதும் காணொளியில் தெரிந்தது.
காயமுற்ற ஆடவர் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
லாரியை ஓட்டிச் சென்ற 43 வயது ஆடவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.