மரீன் பரேட் வட்டாரத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) கணுக்கால் அளவு வெள்ளம் ஏற்பட்டது.
நிலத்தடியில் இருக்கும் குழாய் ஒன்றை ஊழியர்கள் தவறுதலாக இடித்ததால் அது வெடித்தது. அதனால் மரீன் பரேட்டில் வெள்ளம் ஏற்பட்டது.
பால்-லிங் கன்ஸ்டிரக்ஷன் (Pal-Link Construction) எனும் கட்டுமான நிறுவனம், மின்தூக்கி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நிலத்தடியில் இருக்கும் குழாய் ஒன்றைத் தவறுதலாக இடித்ததாக மரீன் பரேட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் உதவிச் செயலாளர் யூசோஃப் அப்துல் லத்தீஃப் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
மரீன் டிரைவ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 67ல் அமைந்துள்ள மரீன் பரேட் சமூக மன்றமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்றும் திரு யூசோஃப் கூறினார். அதன் காரணமாக சமூக மன்றத்தில் இப்போதைக்கு சில சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாக அங்குள்ள சிலர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள், கடைகளில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்றே விற்பனையைத் தொடங்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் கடைக்காரர்கள் வருத்தம் தெரிவித்தனர்.