தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா. சண்முகம் கடந்த ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 3ஆம் தேதிவரை சீனா சென்றிருந்தார்.
அங்கு அந்நாட்டுப் பொதுப் பாதுகாப்பு அமைச்சசரைச் சந்தித்த அவர், இருநாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான நல்ல பணி உறவை மறுவுறுதிப்படுத்தினார்.
உள்துறை அமைச்சு வியாழக்கிழமை (பிப்ரவரி 5) ஓர் அறிக்கை வழியாக இதனைத் தெரிவித்தது.
சீனாவின் மத்திய அரசியல், சட்ட விவகார ஆணையத்தின் செயலாளர் சென் வென்சிங்கையும், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வாங் சியாவ்ஹாங்கையும் திரு சண்முகம் சந்தித்துப் பேசினார்.
திரு வாங்குடனான சந்திப்பின்போது, சிங்கப்பூர்-சீனா இடையே சட்ட அமலாக்க ஒத்துழைப்பை, குறிப்பாக மோசடிகள், போதைப்பொருள் கடத்தல் தடுப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை செய்தார்.
அவ்வப்போதைய பரிமாற்றங்கள் மூலம் உறவுகளை வலுப்படுத்த அவர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.
சட்ட அமலாக்கம், சட்டம், நீதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திரு சென்னும் திரு சண்முகமும் கலந்தாலோசித்தனர்.

