சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவின் பாலி, ஜகார்த்தா, சுரபாயா ஆகிய நகரங்களுக்கும் இடையே அடுத்த ஆண்டு (2025) முதல், பயணிகள் கூடுதல் விமானத் தெரிவுகளைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்சும் (எஸ்ஐஏ) கருடா இந்தோனீசியா விமான நிறுவனமும் இதன் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தம் இதைச் சாத்தியமாக்கும்.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இரு விமான நிறுவனங்களின் கூட்டு விமானக் கட்டணத் திட்டம் குறித்த தகவல் வெளியாகும்.
எடுத்துக்காட்டாக, நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை சிங்கப்பூரிலிருந்து பாலிக்கு அன்றாடம் ஆறு விமானச் சேவைகளை வழங்குவதாக எஸ்ஐஏ இணையத்தளம் கூறுகிறது.
இதே காலகட்டத்தில் அன்றாடம் ஒன்பது விமானச் சேவைகளை வழங்குவதாக கருடா இந்தோனீசியா இணையத்தளம் குறிப்பிடுகிறது.
நவம்பர் 12ஆம் தேதி கூட்டுக் கட்டணத் திட்டம் குறித்த அறிவிப்பைக் கூட்டறிக்கை மூலம் வெளியிட்ட இரு விமான நிறுவனங்களும் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவிற்கும் இடையே விமானச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தன.
நவம்பர் 22ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவிற்கும் இடையே எட்டு விமானச் சேவைகள் இயக்கப்படும். தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து இரு நகரங்களுக்குமிடையே கருடா ஆறு விமானச் சேவைகளை இயக்கும். தற்போது அது நான்கு விமானச் சேவைகளை வழங்கிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 1ஆம் தேதி முதல் இரு விமான நிறுவனங்களும் வாரத்திற்கு 390 சேவைகளை ‘கோட்ஷேரிங்’ முறையில் இயக்கும். இந்த முறையின்கீழ் ஒன்று மற்றதன் விமானங்களுக்கான இருக்கைகளை விற்பனை செய்ய முடியும். அந்த 390 சேவைகளில் 362 சேவைகள் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவிற்கும் இடையிலானவை.
இந்தோனீசியாவிலும் சிங்கப்பூரிலும் வர்த்தக, சுற்றுப்பயண நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கவும் வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பலனளிக்கும் வகையில் வர்த்தகப் பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் உறுதியான கடப்பாடு கொண்டிருப்பதாக இரு விமான நிறுவனங்களும் தெரிவித்தன.