மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழலால் மார்ச் 28ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான மேலும் பல விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ரத்து செய்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை (மார்ச் 11) தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கில் நிலவிவரும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக எஸ்கியூ494 (சிங்கப்பூரிலிருந்து துபாய்), எஸ்கியூ495 (துபாயிலிருந்து சிங்கப்பூர்) என்ற இரு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்களின் 26 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக மார்ச் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 5ஆம் தேதியிட்ட ஃபேஸ்புக் பதிவில், எஸ்கியூ494 மற்றும் எஸ்கியூ495 சேவைகள் மார்ச் 15 வரை நிறுத்திவைக்கப்படுவதாக எஸ்ஐஏ அறிவித்தது.
மார்ச் 17 வரை ‘ஸ்கூட் ஜெட்டா’ விமானச் சேவைகள் ரத்து
இந்நிலையில், புதன்கிழமை வெளியான அறிவிப்பில், “விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானங்களில் பயண ஏற்பாடு செய்து தரப்படும்.
“அல்லது பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளுக்கான முழுத் தொகையையும் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு மோதலால் சிங்கப்பூருக்கும் ஜெட்டாவிற்கும் இடையிலான தனது விமானச் சேவைகளையும் ஸ்கூட் நிறுவனம் மார்ச் 17ஆம் தேதிவரை ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்கூட், டிஆர்596 (சிங்கப்பூரிலிருந்து ஜெட்டா) மற்றும் டிஆர்597 (ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூர்) என்ற விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

