லோரோங் சுவான் அருகே செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) பல வாகனங்கள் தொடர்பான விபத்தில் இரு வாகன ஓட்டிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அன்று மாலை 6.40 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 1, பவுண்டரி சாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் இரு கார்களும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
66 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் 61 வயது கார் ஓட்டுநரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர்.
19 வயது கார் ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உதவுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்திக்குழுவினர் சம்பவ இடத்துக்கு அன்றிரவு 8.30 மணியளவில் சென்றபோது, கடுமையாகச் சேதமடைந்திருந்த கறுப்பு நிறக் காரைக் கண்டனர். பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அவ்வாகனம் இழுவை வகனத்தால் அகற்றப்படுவதை பார்வையிட்டனர்.

