ஈசூனில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் ஒரு எட்டு வயதுச் சிறுமியும் அடங்குவார்.
இவ்விபத்து செவ்வாய்க்கிழமை (மே 26) நிகழ்ந்தது. ஈசூன் ரிங் ரோட்டில் நிகழ்ந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தன.
ஒரு வேன், லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளானதாகக் காவல்துறை தெரிவித்தது. லாரி ஓட்டுநரான 46 வயது ஆண், லாரியில் பயணியாக இருந்த 68 வயது மாது, 45 வயது ஆண் மோட்டார் சைக்கிளோட்டி, மோட்டார் சைக்கிள் பயணியான எட்டு வயதுச் சிறுமி ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நால்வரும் சுயநினைவுடன் இருந்தனர். அவர்களில் மூவர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்கும் ஒருவர் கேகே மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வேன் ஓட்டுநரான 24 வயது பெண் விசாரணையில் ஒத்துழைப்பதாகக் காவல்துறை கூறியது.
விபத்து பதிவான படங்களை ஷின் மின் ஊடகம் வெளியிட்டது. லாரி ஒன்றின் முன்சக்கரங்களுக்குக்கீழ் ஒரு மோட்டார் சைக்கிள் நசுங்கிக் கிடந்தது அப்படங்களில் தெரிந்தது.

