சிங்கப்பூரில் உள்ள சொத்து மேம்பாட்டாளர்கள் பிப்ரவரியில் 246 தனியார் வீடுகளை மட்டுமே விற்பனை செய்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் விற்கப்பட்ட 1,597 வீடுகளைக் காட்டிலும் அது 84.6 விழுக்காடு குறைவு. சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் புதிய வீட்டுத் திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை.
பிப்ரவரி மாத விற்பனையில், எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டு விற்பனையைத் தவிர்த்து இந்த ஆண்டு ஜனவரி மாத விற்பனையான 466 வீடுகளில் பாதியை விடச் சற்று அதிகம் விற்பனையானதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டின.
பிப்ரவரியில், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உட்பட 266 வீடுகள் விற்கப்பட்டன. சென்ற ஆண்டு அதே மாதத்தில் 1,626 வீடுகள் விற்பனையாயின. இவ்வாண்டு ஜனவரியில் 990 வீடுகள் விற்கப்பட்டன.
மத்திய வட்டாரத்தின் எஞ்சியப் பகுதியில், கூட்டுரிமை வீடுகளும் தனியார் வீடுகளும் அதிகமாக விற்பனையாயின. பிப்ரவரி விற்பனையில், 41.9 விழுக்காடு அவற்றுக்குச் சென்றன.
அதனைத் தொடர்ந்து, முதன்மை விற்பனையில் 32.5 விழுக்காடு மத்திய வட்டாரத்திற்கு வெளியில் உள்ள புறநகர்ப் பகுதியைச் சேரும்.
அதேவேளை, புதிய விற்பனையில் 25.6 விழுக்காட்டு விற்பனைகள் முக்கிய மத்திய வட்டாரத்தில் செய்யப்பட்டன.

