தமிழ்ப் புத்தாண்டு பொதுவாக ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் நிறைவு செய்துவிட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தை துவக்கும் நாள் இது. இதைச் ‘சித்திரைத் திருநாள்’ என்றும் அழைக்கிறார்கள்.
தமிழ் நாள்காட்டியில் இது சித்திரை மாதத்தின் முதல் நாளாகும். இந்த ஆண்டு விசுவாவசு ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 14ஆம் திங்கட்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு விசுவாவசு ஆண்டு பிறப்பதாக மார்சிலிங் சிவகிருஷ்ண ஆலயம் தெரிவித்தது.
வீட்டில் வழிபாட்டுக்கான நேரம் காலை 5.30 முதல் 8.30 மணிவரை; பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை; மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை என்று ஸ்ரீ சிவன் கோயில் குறிப்பிட்டது.
இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருக்கும்.
அசாமில் பிஹு, பஞ்சாபில் பைஷாகி, மேற்கு வங்கத்தில் போஹேலா போய்ஷாக் என பல இந்திய சமூகங்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை ஒரே நேரத்தில் கொண்டாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.