வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் 257 தொண்டூழியத் திட்டங்கள் வழியாகக் கடந்த மூவாண்டுகளில் 600,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.
சமூக உதவித் திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதார, நல்வாழ்வுத் திட்டங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
சமூகத்தில் நீடித்து நிலைக்கத்தக்க வாழ்வியல் முறையை ஊக்குவிக்கும் திட்டங்களையும் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் செயல்படுத்தி வருகிறது.
கரையோரப் பூந்தோட்டங்களின் மலர்மாடத்தில் (Flower dome) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றக் கூட்டம் 2023இல் அந்த 257 திட்டங்களும் கொண்டாடப்பட்டன.
அவற்றுள் ‘டிரைஜென்’ எனப்படும் முத்தலைமுறையினரும் அடங்கிய இல்லப் பராமரிப்புத் தொண்டூழியக் குழுவும் ஒன்று.
பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இக்குழு இதுவரை 192 முதியோர்களுக்கு உதவியுள்ளது. இதுவரை 717 மாணவத் தொண்டூழியர்கள் அதில் பங்கெடுத்துள்ளனர்.
குழுவின் இப்போதைய திட்ட இயக்குநரும் மருத்துவ மாணவியுமான குமாரி தங்கராஜா கீர்த்தனா, 21, கூறுகையில், “வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் எங்களது நோக்கத்தில் நம்பிக்கை கொண்டு, இத்தனை ஆண்டுகளாக ஆதரவளித்து வருவது உண்மையிலேயே எங்களுக்குப் பேருதவியாக இருக்கிறது,” என்றார்.

