சிங்கப்பூரில் புதிய சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பை அமைப்பதற்கான $188.3 மில்லியன் மதிப்பிலான குத்தகையை ‘ஓகேபி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஒரு பிரிவிற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.
ஆணையத்தின் ‘தீவு முழுவதற்குமான சைக்கிளோட்டக் கட்டமைப்பு’ எனும் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் ஓர் அங்கமாக அந்த சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பு அமையவிருக்கிறது.
அது, கேலாங், ஹவ்காங், காக்கி புக்கிட், மரின் பரேட், போத்தோங் பாசிர், செங்காங், சிராங்கூன் ஆகிய ஏழு நகர்ப்புறப் பகுதிகளை இணைக்கும்.
‘ஓகேபி’ நிறுவனம், அதன் கட்டுமானம், மேற்பார்வை, சைக்கிளோட்டப் பாதைகளையும் சைக்கிளோட்டுவோரும் நடந்துசெல்வோரும் பகிர்ந்துகொள்ளும் பாதைகளையும் அமைத்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும்.
அதனோடு தொடர்புடைய உள்கட்டமைப்பின் மறுகட்டுமானப் பணிகளிலும் அந்நிறுவனம் ஈடுபடும். மரம் நடுதல், நிலவனப்புப் பணிகள் போன்றவற்றை அது மேற்கொள்ளும்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி அதற்கான 18 மாதக் குத்தகை ‘ஓகேபி’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
புதிய சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பின் பணிகள் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


