ஜூன் 29ல் செயல்படத் தொடங்கும் இணையப் பாதுகாப்பு ஆணையம்

ஜூன் 29ல் செயல்படத் தொடங்கும் இணையப் பாதுகாப்பு ஆணையம்

2 mins read
170c72a8-4f7f-47ab-9328-55046516658d
இணையப் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தலைமையேற்கும் திரு பிரான்சிஸ் இங். - படம்: தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்

இணையத் தீங்குகளால் பாதிப்படைவோர்க்கு ஆதரவளிக்கும் இணையப் பாதுகாப்பு ஆணையம் ஜூன் 29ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கும்.

இணையப் பாதுகாப்பு (நிவாரணம் மற்றும் பொறுப்புடைமை) சட்டம் 2025ன்கீழ் உள்ள சட்ட ரீதியான தவறுகள் குறித்த குறிப்பிட்ட விதிகளும் அதே நாளில் நடைமுறைக்கு வரும்.

2025 நவம்பர் 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் தொடர்பில் ஆணையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

புகார்கள் குறித்து உரிய பதிலோ நடவடிக்கைகளோ எடுக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரலாம்.

இந்தச் சட்டம் 13 வகையான இணையவழித் தீங்குகளுக்கு எதிராகச் செயல்படும். முதற்கட்டமாக அந்தரங்கப் படங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், புகைப்படங்கள் அடிப்படையிலான குழந்தைத் துன்புறுத்தல், தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுதல், இணையவழித் துன்புறுத்தல், இணையத்தில் தொல்லை கொடுத்தல் ஆகிய ஐந்து தீங்குகளில் கவனம் செலுத்தும்.

இணையவழி ஆள்மாறாட்டம், நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கம், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிற தீங்குகளைப் படிப்படியாகக் கையாளத் தொடங்கும்.

தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள், இணையத்தில் பரவும் வேகம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள், இணையத்தில் பரவும் வேகம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது. - படம்: எஸ்பிஎச் மீடியா

ஆணையத்திற்கு மூத்த அரசாங்க ஊழியரான பிரான்சிஸ் இங் தலைமையேற்கவுள்ளார்.

பொதுத்துறைச் சட்டப் பணிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் பெற்ற அவர், சட்ட அமைச்சில் இயக்குநர் (சட்டக் கொள்கை), தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றப் பிரிவு துணைத் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

இவை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிடுபவர்கள், அவ்வகைப் பக்கங்களை இயக்குபவர்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதன்மூலம், இணையவழித் தீங்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் சட்ட அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்