பேஷோர் டிரைவ் வட்டாரத்தில் வர்த்தக, குடியிருப்புத் தளம் ஒன்றை நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 30) விற்பனைக்கு விட்டுள்ளது.
அந்த மேம்பாட்டுத் திட்டம் பிடோக் சவுத் ரயில் நிலையம், பேருந்து முனையம், சில்லறை வர்த்தகக் கடைகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
பேஷோர் டிரைவ்வில் உருவாக்கப்படும் புதிய வட்டாரத்தில் கிட்டத்தட்ட 1,280 வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் இவ்வாண்டுக்கான முற்பாதிப் பட்டியலில் அந்த 99 ஆண்டு குத்தகைக்காலம் கொண்ட பகுதியை விற்பனைக்கு விட ஆணையம் உறுதிசெய்துள்ளது.
தேவைக்கு ஏற்ப பட்டியலில் இடம்பெறும் பகுதிகள் குறிப்பிட்ட காலகட்டங்களில் விற்பனைக்கு விடப்படும்.
கூடிய விரைவில் உருவாக்கப்படும் பேஷோர் குடியிருப்பு வட்டாரத்தில் விற்பனைக்கு விடப்பட்ட இரண்டாவது பகுதி அது. அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 57,460.6 சதுர அடி.
இதற்குமுன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதி முதல் முறையாக விற்பனைக்கு விடப்பட்டது. அதற்கு எட்டு பேர் போட்டிப்போட்டுக்கொண்டு முன்வந்தனர்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் விற்பனைக்கு விட்டுள்ள பேஷோர் டிரைவ் வட்டாரத்துக்கான குத்தகைக்கு ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

