கிராப், ஃபுட்பாண்டா, லாலாமூவ் போன்ற இணையவழித் தளங்களைப் பயன்படுத்தும் விநியோக ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்றோர் மேம்பட்ட பிரதிநிதித்துவத்துடன் அதிக பேர உரிமை பெறவிருக்கின்றனர்.
இணையவழி ஊழியர்களின் நலனுக்காகப் பிரதிநித்துவ அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த வழிகோலும் புதிய சட்டக் கட்டமைப்பைச் செயல்படுத்த முத்தரப்புப் பணிக்குழுவினர் செய்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை அறிவித்தது. புதிய சட்டக் கட்டமைப்பு 2024 இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரும்.
இதன்வழி சிங்கப்பூரில் உள்ள 88,000க்கும் மேற்பட்ட இணையவழி ஊழியர்கள், சட்டபூர்வ அதிகாரத்துடன் தொழிற்சங்கங்கள் போல் செயல்படும் பிரதிநிதித்துவ அமைப்புகளின் வாயிலாக மேம்பட்ட வேலை நிலவரங்களைக் கோரி பேச்சுவார்த்தை நடத்த இயலும்.
தொழிற்சங்கங்களைப் போலவே இந்த அமைப்புகளும் ஊழியர்களின் சார்பில் இணையவழி நிறுவனங்களுடன் சட்டபூர்வ கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும். நிறுவனங்களின் பொறுப்புடைமையை இது உறுதிசெய்யும்.
கூட்டு சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் நடைமுறையும் அமலாக்கப்படும். எந்தவொரு விவகாரமும் தொழில்துறை நடுவர் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்லப்படுமுன் சமரசப் பேச்சுவார்த்தைக்காக மனிதவள அமைச்சிடம் முதலில் கொண்டு செல்லப்படும்.
இணையவழி ஊழியர்களின் பிரதிநிதித்துவம் சிக்கலான ஒன்று என மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை கூறினார். இணையவழி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் ஊழியர்களுக்கு வெவ்வேறு முன்னுரிமைகள் இருப்பதும் இதற்குக் காரணம் என வாழ்நாள் கற்றல் நிலையத்தில் 120 ஊழியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது அவர் குறிப்பிட்டார்.
முத்தரப்புப் பணிக்குழுவின் பரிந்துரைகள் இணையவழி பணியின் தனித்துவ அம்சங்களை, குறிப்பாக நீக்குப்போக்குத்தன்மையை, கருத்தில் கொண்டு இரு தரப்புக்கும் சாதகமான கட்டமைப்பை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
தொழிலாளர் இயக்கமும் அதைச் சார்ந்த சங்கங்களும் இணையவழி ஊழியர்களை அதிகாரபூர்வமாகப் பிரதிநிதிப்பதற்குப் புதிய சட்டக் கட்டமைப்பு வழிவகுப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் குறிப்பிட்டது.
தற்போதுள்ள சட்டங்களின்கீழ் இணையவழி ஊழியர்கள் ஊழியர்களாக அங்கீகரிக்கப்படாததால் அவர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்க முடியாது. இதனால், பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண்பதும் சவாலாக இருப்பதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியது.
இணையவழி ஊழியர்களின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை ஆராய 2022 ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட முத்தரப்புப் பணிக்குழு புதிய கட்டமைப்புக்கான பரிந்துரைகளை முன்வைத்தது.
இணையவழி ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் அமைப்புகள் இணையவழி நிறுவனங்களிடம் நேரடி அங்கீகாரம் பெற்று அல்லது இரகசிய வாக்கெடுப்பில் தகுதிபெறும் ஊழியர்களிடமிருந்து பெரும்பான்மை இணக்கத்தைப் பெற்று அதிகார உரிமை பெறலாம் என்பது பணிக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று.
இணையவழி ஊழியர்களுக்கான இரகசிய வாக்கெடுப்பை மனிதவள அமைச்சு மின்னியல் முறையில் நடத்தவேண்டும் என்றும் பணிக்குழு பரிந்துரைத்தது. இணையவழி ஊழியர்களுக்கு நிலையான வேலை நேரமோ அல்லது வேலையிடமோ இல்லாதது இதற்குக் காரணம்.
பேச்சுவார்த்தைகள் பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்பினரின் கருத்திணக்கத்துடன் நடைபெறவேண்டும் என்றும் பணிக்குழு கூறியது.
புதிய சட்டக் கட்டமைப்பின் சில அம்சங்கள் இன்னும் முடிவாகவில்லை. இதனை அமல்படுத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேற்றப்படவேண்டும்.