காவல்துறை: ரைஃபல் ரேஞ்ச் வேலையிட மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை

காவல்துறை: ரைஃபல் ரேஞ்ச் வேலையிட மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2024 - 7:59 pm

2 mins read

ரைஃபல் ரேஞ்ச் வேலையிடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக 31 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று காலை 7.45 மணி அளவில் நிகழ்ந்தது.

திரு இலி சாவ்வின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் நடக்கவில்லை என்று நவம்பர் 5ஆம் தேதியன்று மரண விசாரணை அதிகாரியிடம் காவல்துறை தெரிவித்தது.

கிட்டத்தட்ட 900 கிலோ இயந்திரம் ஒன்றை ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு நகர்த்த சக ஊழியர்களுடன் திரு சாவ் முற்பட்டபோது விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாரந்தூக்கியிலிருந்து அந்த இயந்திரம் விழுந்ததாக திரு சாவ்வின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரியான மூத்த ஸ்டாஃப் சார்ஜெண்ட் இங் தியேன் சூன் தெரிவித்தனர்.

அந்த இயந்திரம் திரு சாவ்வின் மீது விழுந்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து ஊழியர்களின் மேற்பார்வையாளரிடம் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்தை அடைவதற்குள் திரு சாவ் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

திரு சாவ் சுவர் மீது சாய்ந்துகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததாவும் மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்ததாகவும் திரு இங் கூறினார்.

திரு சாவ், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலை 9.03 மணிக்கு மரணம் அடைந்தாகவும் திரு இங் கூறினார்.

நவம்பர் 5ஆம் தேதியன்று நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த திரு சாவ்வின் பெற்றோருக்கும் சகோதரிக்கும் மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்