காஸாவில் அமைதியை நிலைநாட்டி பிணையாளிகளை விடுவிக்க வழியமைக்கும் முதற்கட்ட உடன்பாட்டைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்றுள்ளார்.
காஸாவில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரைத்த திட்டத்தின் ஒரு பகுதி அந்த உடன்பாடு.
திரு டிரம்ப்பின் தலைமைத்துவம், கத்தார், எகிப்து, துருக்கி ஆகியவை முன்னெடுத்த முயற்சிகள் ஆகியவற்றை மெச்சிய பிரதமர் வோங், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தி இத்துடன் ஈராண்டு ஆகிவிட்டன என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“இது முக்கிய முதல் படி. ஆனால் முன்பிருக்கும் பாதையில் செல்வது அவ்வளவு சுலபமானது அல்ல,” என்றார் அவர்.
“இறுதிக்கட்ட ஒப்பந்தம் கூடிய விரைவில் எட்டப்படும் என்று நம்புவோம். அப்போது காஸா மக்களால் தங்கள் வாழ்க்கையையும் இழந்த வீடுகளையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்,” என்ற திரு வோங், பாலஸ்தீன மக்களுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் எப்போதும் தயாராக உள்ளது என்றார்.
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் நீடிக்கும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய சிங்கப்பூரும் பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு புதிய உடன்பாட்டை வரவேற்பதாகக் கூறியது. சண்டையை நிறுத்தி பிணையாளிகளை விடுவிப்பது காஸா மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் பெரிய அளவில் நிம்மதியைத் தரும் என்று அமைச்சு சுட்டியது.