பிரதமர் லாரன்ஸ் வோங் நாளை (நவம்பர் 28) தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பை ஏற்று நிதி அமைச்சருமான பிரதமர் வோங் அங்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தில் தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலொங்கொர்ன், அரசியார் சுதிடா ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.
திருவாட்டி பேடோங்டானையும் அவர் சந்திக்கிறார். திரு வோங் மற்றும் அவரது பேராளர்களுக்கும் திருவாட்டி பேடோங்டார்ன் அதிகாரபூர்வ மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (நவம்பர் 27) அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
பிரதமர் வோங்கின் பேங்காக் பயணம், மே மாதம் பிரதமர் பொறுப்பு ஏற்றதிலிருந்து தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு மேற்கொண்டு வரும் அறிமுகப் பயணத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.
இவ்வட்டாரத்தில் இதுவரை மலேசியா, புருணை, இந்தோனீசியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான அரசதந்திர உறவு 1965ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் இரு நாடுகளும் 2025ஆம் ஆண்டில் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.
இரு அண்டை நாடுகளும் நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைத்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ‘பேநவ்’ தாய்லாந்தின் ‘புரோம்ப்ட்பே’ ஆகியவை உலகின் முதல் இணைப்பை ஏற்படுத்தி பணம் செலுத்தும் முறை தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்கும் சிங்கப்பூர், தாய்லாந்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் கைப்பேசி எண்ணைக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையே பணம் அனுப்ப முடியும்.

