தாய்லாந்தின் அண்மைய வெள்ளத்தில் சிக்கிய சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்யத் தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளின் விரைவான உதவி கைகொடுத்தது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) கூறியுள்ளார்.
அவ்விரு நாட்டு அதிகாரிகளுக்கும் சிங்கப்பூர் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் முடிந்த அளவு ஆதரவு வழங்கச் சிங்கப்பூர் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள ஹாட் யாய் நகர் அண்மைய வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு சில நாள்கள் மின்தடை ஏற்பட்டதுடன் உணவும் தண்ணீரும் போதிய அளவு கிடைக்கவில்லை.
தென்கிழக்காசியாவில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருத்தமடைவதாகக் கூறினார் திரு வோங். இந்த வட்டாரத்தில் ஏறக்குறைய 900 பேர் கனமழையால் உயிரிழந்தனர். இலங்கையில் மேலும் 350 பேர் மாண்டுவிட்டனர்.

