மருந்துப் பொருள்கள், ஆபாசமான படங்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சாங்கி சிறைக்குள் கடத்த உதவியதற்காகச் சிறைச்சாலை அதிகாரியான 39 வயது முகம்மது அஸ்ரி அப்துல் ரஹிமுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 9) 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அஸ்ரி உதவிய கைதியான 50 வயது முகம்மது யூசோஃப் காசிமுக்கும் 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2021 ஆகஸ்ட் முதல் 2022 ஜூன் வரை கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடந்த ஊழல் செயல்கள் சம்பந்தப்பட்ட பல குற்றங்களை அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி ஒப்புக்கொண்டனர்.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அஸ்ரிக்கு $3,700 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. யூசோஃப்பிடமிருந்து அவர்களது நண்பர்கள், தெரிந்தவர்கள்மூலம் அவர் பெற்ற லஞ்சத் தொகையின் அளவு அது.
லஞ்சம் கொடுக்க உதவிய யூசோஃப்பின் நண்பர்களில் ஒருவரான முன்னாள் கைதி முரளி விக்னேஷ்வரனுக்கு, 36, நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.