அபராதத்தைக் குறைக்க பிரித்தம் வழக்கறிஞர் கோரிக்கை

பிரித்தம் சிங் தேர்தலில் நிற்பதற்கான தகுதியைத் தக்கவைக்க முயற்சி

அபராதத்தைக் குறைக்க பிரித்தம் வழக்கறிஞர் கோரிக்கை

2 mins read
23a9fb79-70c3-4e32-b2d1-4966da472101
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்தது தொடர்பான வழக்கில் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் குற்றவாளி என பிப்ரவரி 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  - படம்: படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்த வழக்கில் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் குற்றவாளி என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், அரசுத் தரப்பு முன்வைத்துள்ள $7,000 அபராதத் தொகையைக் குறைக்குமாறு தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோய் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த வழக்கு திருவாட்டி ரயீசா கான் உரைத்த பொய்யுடன் தொடங்கியது. அதில் திரு சிங் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

“மேலும், இவ்வழக்கில் திரு சிங் திருவாட்டி கானிடம் பொய் சொல்லச் சொன்னதாகக் குற்றம் சாட்டப்படவில்லை. ஏற்கெனவே உரைத்த பொய்யை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும்படி ரயீசா கானிடம் அவர் கூறவில்லை என்பதே அரசுத் தரப்பின் வாதம்,” என்றார் திரு. ஜுமாபோய்.

அரசாங்கத் தரப்பு, பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் எதிர்நோக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் தொடர்பிலும் அதிகபட்சம் $7,000 அபராதம் விதிக்கக் கோரிய நிலையில் திரு சிங்கின் தரப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இருதரப்புக் கோரிக்கைகளையும் கேட்ட நீதிபதி லியூக் டான் தண்டனை விவரத்தைப் பிற்பகலில் அறிவிப்பதாகக் கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கை பிற்பகல் 3:15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் சில மணிநேரத்தில் வரவுள்ள தீர்ப்பின் விவரம், திரு பிரித்தம் சிங்கின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்ச் சட்டப்படி, 10,000 வெள்ளிக்குமேல் அபராதம் விதிக்கப்பட்டவரோ ஓராண்டுக்குமேல் சிறைக்குச் சென்றவரோ நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை இழந்துவிடுவார் என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்